’வெங்காயம்’ ‘பயாஸ்கோப்’ படங்களின் இயக்குநரும் பெரியார் தொண்டருமான சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், அவர் தயாரித்து, கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அத்தனை தொழில்நுட்பப் பணிகளையும் தனி ஒருவராகச் செய்து, உலகத் சினிமா வரலாற்றிலேயே இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை இப்படத்தின் மூலம் அவர் நிகழ்த்தியுள்ளார்.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், இப்படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்த பிறகு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்து வழிகாட்டுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர் உடனடியாக பிவிஆர் (PVR) நிறுவனத்திடம் பேசி வெளியிட வழிவகை செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தன் மீதும் தன் முயற்சியின் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவளித்த பிவிஆர் நிறுவனத்திற்கும், ஸ்டுடியோவின் சாவியை வழங்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜாவுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா, “ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்து படத்தை உருவாக்கியுள்ளார் என்றதும் தனக்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் படம் பார்த்த பிறகு இது இந்தியத் திறமையின் உச்சம் என்றும், பல கதாபாத்திரங்களில் அவரே நடித்து சாதனை படைத்துள்ளதாகவும் வியந்து பாராட்டினார். மேலும், இப்படம் மாணவர்களுக்குக் காட்டும் வகையில் திரையிடப்பட வேண்டும் என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்கள் வந்திருந்தாலும், எந்தவிதப் பெரிய பின்னணியும் இல்லாமல் ஒரு தனிமனிதனின் அர்ப்பணிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஒரு வரலாற்றுப் பதிவு என்றார்.
தெருக்கூத்துக் கலைஞரான சங்ககிரி ராஜ்குமாரின் உழைப்பு தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்துள்ளதாகவும், சினிமா மீதான அவரது தீவிர காதலைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

இயக்குநர் சேரன், ”சங்ககிரி ராஜ்குமாரின் முந்தைய படமான ‘வெங்காயம்’ திரைப்படத்திற்கு தான் ஆதரவு அளித்தது போல, இந்த ‘ONE MAN’ படத்திற்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார். குறுகிய பட்ஜெட்டில் சிறந்த படங்களை உருவாக்க முடியும் என்பதை ராஜ்குமார் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும், எதிர்காலத்தில் தமிழ் சினிமா இவரைக் கொண்டாடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சங்ககிரி ராஜ்குமாரை சந்தித்ததாகக் கூறினார். ‘ONE MAN’ படம் எப்படி சாத்தியமானது என்பது தனக்கே இச்சந்திப்பிலும் வியப்பாக இருப்பதாகவும், இத்தகைய புதுமையான முயற்சி வெற்றி பெற்றால்தான் மேலும் பல இளைஞர்கள் சினிமா உலகிற்கு வருவார்கள் என்றும் கூறி, ஊடகங்கள் இப்படத்திற்கு முழுமையான ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
