நடிகர் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் கூறப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை என்று ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து வெளிநாட்டுக்கு தகவல் கொடுத்தார் என்று கூறி தேசத் துரோக வழக்கில் 1994ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து 4 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் 1998ம் ஆண்டு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை ஆனார்.
நம்பி நாராயணின் எதிர்கொண்ட இந்த வழக்கை கொண்டு நடிகர் மாதவன், ’ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.
அவரே நம்பி நாராயணன் பாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கடந்த ஜூலை 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றது.
தொடந்து ஓடிடியிலும் வெளியாகி அதிக பார்வைகளை பெற்று வருகிறது.
இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் கூறப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை என்று ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் ஏ.இ.முத்துநாயகம், இ.வி.எஸ்.நம்பூதிரி, டி.சசிகுமாரன் உட்பட இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் கூட்டாக நேற்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களிடம் பேசினர்.
90 சதவீதம் தவறான தகவல்கள்!
அவர்கள் கூறுகையில், ”விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்து அவதூறு கருத்துகளை கூறியுள்ளதால், சில விஷயங்களை பொதுமக்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சில தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், இந்த திரைப்படத்தில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மை என்று நாராயணன் கூறியுள்ளார்.
ஆனால் இந்த படத்தில் 90 சதவீதம் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரோவில் பணியாற்றி, ஜனாதிபதியாகவும் பதவி வகித்த அப்துல் கலாமின் தவறை திருத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல்.
அதேபோல், தான் கைது செய்யப்பட்டதால்தான் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில் நுட்பம் தாமதமாக கிடைத்தது என்றும், முற்றிலும் ஆதாரமற்ற தகவலை இந்த சினிமாவில் கூறியுள்ளனர்.
நாராயணனுக்கும் கிரையோஜெனிக் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுகுறித்து இஸ்ரோவின் தற்போதைய தலைவரான எஸ்.சோமநாத்திடம், படத்தில் கூறப்பட்டுள்ள தவறான கருத்துகள் குறித்து பேசியுள்ளோம்” என்று கூறி உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.