இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ‘பாலிமர்’ எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதன்படி 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பாலிமர் நோட்டுகளை சோதனை முறையில் அச்சடித்து, அவை இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் உள்கட்டமைப்பில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பரிசோதிக்க ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.
கடந்த வாரம் நடந்த நாணய கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரக்கூடும்’ என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் நீரஜ் சேகர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “10 ரூபாய், 20 ரூபாய் மதிப்புள்ள பாலிமர் பணத்தாள்களை பல பரிசோதனைக்காக 100 கோடி ரூபாய் எண்ணிக்கையில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அரசுக்கு அனுப்பியுள்ளது.
இந்த திட்டத்திற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பரிசோதனை வெற்றி அடைந்த பிறகு பாலிமர் பணத்தாள்களின் வழக்கமான விநியோகம் தொடங்கும்” என்று பதில் அளித்தார்.
பாலிமர் பணத்தாள்கள் என்றால்…
பருத்தி அடிப்படையிலான காகிதத்திற்கு பதிலாக, பிளாஸ்டிக் மூலப் பொருட்களால் பாலிமர் பணத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தொட்டால் காகித பணத்தை போலவே இருந்தாலும் நீண்ட நாள் பயன்பாட்டுக்கு புழக்கத்தில் இருக்கக்கூடியவை.
ஈரம், அழுக்கு மற்றும் தேய்மானத்தை எதிர்க்கும் திறன் கொண்டது. பாலிமர் பணத்தாள்கள் சுத்தமாக இருக்கவும், அன்றாட பயன்பாட்டில் ஏற்படும் சேதங்கள் குறையவும் வாய்ப்பு உள்ளது.
இது, see through windows, மைக்ரோ ஆப்டிக் ஹாலோகிராம்கள் மற்றும் சிறப்பு மை போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்பதால் போலி நோட்டுகளை தயாரிப்பது மிகவும் கடினம்.
ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட சுமார் 60 நாடுகள் பாலிமர் பணத்தாள்களை பயன்படுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி ஏன் பிளாஸ்டிக் பணத்தாள்களை அறிமுகப்படுத்துகிறது?
2026 மே மாதத்தில் முதன் முதலில் பாலிமர் பணத்தாள்கள் குறித்த செய்திகள் வெளியானது. காகித பணத்தை அச்சிடுவதற்கான செலவு அதிகரிப்பையும், கிழிந்த மற்றும் அழுக்கடைந்த பணத்தாள்களை அடிக்கடி மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் தவிர்க்க பாலிமர் பணத்தாள்களுக்கு மாறும் திட்டத்தை ரிசர்வ் வங்கி பரிசீலித்துள்ளது.
