கல்விக்காக வாங்கிய கடனை காலக்கெடுவுக்கு முன்பாகவே முழுமையாக செலுத்துவது, எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய வட்டி சுமையை குறைக்க உதவும்.
குறிப்பாக கல்விக்கடன்களில் திருப்பிச் செலுத்தும் காலம் பல ஆண்டுகளாக இருப்பதால், வருமானம் அதிகரிக்கும் போது கடனை விரைவாக முடிப்பது குறித்து பலரும் யோசிப்பார்கள்.
மிதக்கும் வட்டி கடனுக்கு முக்கிய சலுகை
RBI-யின் புதிய விதிமுறைகளின்படி, தனிநபர்கள் தொழில் அல்லாத தேவைகளுக்காக பெற்ற மாறும் வட்டி (Floating Interest Rate) விகித கடன்களுக்கு, 2026 ஜனவரி 1 முதல் முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த விதி முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்கோ பொருந்துகிறது.
கல்விக்கடன்கள் பல நேரங்களில் மிதக்கும் வட்டி அடிப்படையில் வழங்கப்படுவதால், தகுதியான கடன்களுக்கு இந்த விதி பயனுள்ளதாக இருக்கும்.
முன்கூட்டியே செலுத்துவதால் என்ன பயன்?
கடனின் அசல் தொகையை முன்கூட்டியே குறைத்தால், மீதமுள்ள காலத்துக்கான வட்டி கணிசமாக குறையலாம். குறிப்பாக கடன் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் கூடுதல் தொகையை செலுத்துவது, நீண்ட கால வட்டி செலவை கட்டுப்படுத்த உதவும்.
அதே நேரத்தில், கையில் உள்ள முழு சேமிப்பையும் கடனை அடைக்க பயன்படுத்தாமல், அவசரத் தேவைகளுக்கான பணத்தை தனியாக வைத்திருப்பது முக்கியம்.
வரிச்சலுகையையும் கவனிக்க வேண்டும்
கல்விக்கடனை முழுமையாக முடிப்பதற்கு முன்பு, இதுவரை செலுத்திய வட்டிக்கு கிடைக்கும் வரிச்சலுகையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E-ன் கீழ் கல்விக்கடன் வட்டிக்கு குறிப்பிட்ட வரிச்சலுகை கிடைக்கிறது.
கடனை முடித்த பிறகு இதை மறக்காதீர்கள்
கடனை முழுமையாக செலுத்தியவுடன் வங்கியிடம் இருந்து NOC அல்லது கடன் முடிவடைந்ததற்கான சான்றை பெற்றுக்கொள்ள வேண்டும். பிணையமாக ஆவணங்கள் அல்லது சொத்து வழங்கப்பட்டிருந்தால், அவற்றை முறையாக திரும்பப் பெற வேண்டும்.
மேலும், கடன் கணக்கு ‘Closed’ என கிரெடிட் அறிக்கையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்ப்பது அவசியம்.
