இந்திய ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகம் குறைந்துள்ளதாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் பணியாளர்களை பெரிய அளவில் பணிநீக்கம் செய்யாமல் இருந்தாலும், புதிதாக ஊழியர்களை சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் செலவுகள் முக்கிய காரணமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆட்கள் சேர்ப்பதைவிட AIக்கு முன்னுரிமை
முன்பு புதிய பணியாளர்களை நியமிக்க நிறுவனங்கள் ஒதுக்கிய பணத்தின் ஒரு பகுதி தற்போது AI தொழில்நுட்பம் மற்றும் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்குச் செலவிடப்படுகிறது என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
AI மாடல்களை இயக்குவதற்குத் தேவையான சர்வர்கள், கணினி உதிரிபாகங்கள் மற்றும் நினைவக வசதிகளுக்கான செலவுகள் உயர்ந்திருப்பதும் நிறுவனங்களின் பட்ஜெட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோஹோவிலும் இதே நிலை
சோஹோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பெரிய அளவில் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவில்லை. அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியவில்லை என வேம்பு தெரிவித்துள்ளார்.
AI சார்ந்த செலவுகளை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், சர்வர் மற்றும் மெமரி விலை உயர்வு போன்ற சில காரணிகள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மென்பொருள் சந்தையும் மாறுகிறது
AI மூலம் முன்பைவிட வேகமாக மென்பொருள்களை உருவாக்க முடிகிறது. ஆனால் உலகளவில் ஏற்கெனவே மென்பொருள் சந்தை அதிகளவில் நிறைந்துள்ள நிலையில், இன்னும் எவ்வளவு புதிய மென்பொருட்கள் தேவை என்ற கேள்வியையும் ஸ்ரீதர் வேம்பு எழுப்பியுள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் மென்பொருள் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்து, தரம், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனத்தின் பெயர் போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
