EPFO சந்தாதாரர்களுக்கு முக்கிய மாற்றங்கள்: ஓய்வூதியம் உயருமா?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO-வில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக PF பணத்தைத் திரும்பப் பெறுவது, வரி விலக்கு கோருவது, பழைய கணக்குகளைத் தேடுவது உள்ளிட்ட விஷயங்களில் புதிய நடைமுறைகள் அறிமுகமாகியுள்ளன.
15G, 15H-க்கு பதிலாக புதிய படிவம்
ஏப்ரல் 1 முதல் PF தொடர்பான TDS விலக்கு கோருவதற்கு பயன்படுத்தப்பட்ட 15G மற்றும் 15H படிவங்களுக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த படிவம் 121 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
EPF தொகை மற்றும் அதற்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தில் மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்க்க தகுதியுள்ளவர்கள் இந்தப் புதிய படிவத்தைப் பயன்படுத்தலாம். இதற்கான மாற்றத்தை EPFO ஏப்ரல் மாதத்தில் சுற்றறிக்கை மூலம் தெரிவித்தது.
பழைய PF கணக்குகளை கண்டுபிடிக்க புதிய வசதி
பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை மாறியவர்கள் தங்களுடைய பழைய அல்லது செயலற்ற PF கணக்குகளைப் பற்றிய தகவல் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தீர்வாக, UAN உடன் இணைக்கப்படாத கணக்குகளையும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் கண்டுபிடிக்க உதவும் டிஜிட்டல் தளத்தை EPFO உருவாக்கி வருகிறது.
இதன் மூலம் உரிமை கோரப்படாமல் இருக்கும் PF தொகைகளை உறுப்பினர்கள் மீண்டும் அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
ஓய்வூதியம் ரூ.1,000-க்கு மேல் உயருமா?
EPS-95 திட்டத்தின் கீழ் தற்போது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகையை உயர்த்துவது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.950 கோடிக்கு மேல் பங்களித்து வருகிறது.
ஆனால், ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அமலுக்கு வந்த EPS-2026 விதிகளிலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 என்றே தொடர்கிறது. எனவே, ஓய்வூதியம் உயர்ந்துவிட்டதாக வெளியாகும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நம்ப வேண்டாம்.
