ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி 0.5% உயர்வு
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 5) முடிவடைந்தது. நிதிநிலை கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தி இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார்.
3 மாதத்தில் 1.49% அதிகரிப்பு

கடந்த சில மாதங்களாக நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40% ஆக உயர்த்தியது. இதன்பின்னர் மீண்டும் ஜூன் மாதம் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டு மொத்த ரெப்போ வட்டி 4.90% ஆக இருந்தது. இந்நிலையில், 3ஆவது முறையாக ரெப்போ வட்டிவிகிதம் 5.40% ஆக அதிகரித்துள்ளது. மூன்றே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 1.49% அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிப்பு
மேலும் ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.7% ஆக இருக்கும் என்றும் 2-வது காலண்டில் பணவீக்கம் 7.1% ஆகவும், 3வது காலண்டில் பணவீக்கம் 6.4% ஆகவும், 4வது காலண்டில் பணவீக்கம் 5.8% ஆகவும் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சந்தை பாதிப்பால் இந்திய முதலீடு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலை.ரா
