பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நாளை இந்தியாவுடன் இணையக் கூடும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து சங்கங்களின் அறக்கட்டளை நேற்று நவம்பர் 23-ந் தேதி ஏற்பாடு செய்திருந்த ” வலுவான சமூகம் – வளமான இந்தியா” (சஷக்த் சமாஜ் – சம்ரித் பாரத்) என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இதில் பேசுகையில், சிந்தி சமூகத்தினரின் சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும், ஆழமான கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது. இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்றார்.
வணிகம், தொழில், வங்கி, சேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த சமூகம் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதாகவும், இதன் மூலம் பல லட்சக் கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினருக்கு சலுகைகள் கொடுத்தனர்; ஆனால் இந்துக்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த வலி- வேதனையை புரிந்து கொண்டதாலேயே பிரதமர் மோடி குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
சிந்தி மக்கள், சிந்து நதியை புனிதமாக வணங்குகின்றனர்; அந்த சிந்தி மக்களின் சிந்து நிலம் இன்று இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நாளை இந்தியாவுடன் இணையக் கூடும் (பாகிஸ்தானில் உள்ளது) என்றார் ராஜ்நாத் சிங்.
ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்குதான் சொந்தம்; இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என மத்திய அரசு பிரகடனம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்தியாவுடன் இணைய வேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றன.
இதேபோல பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தனிநாடாக பிரிய ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் சிந்து மாகாணம் குறித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு, பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ராஜ்நாத்சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
