நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்றவற்றின் மூலம் உணவுகளை இடைவிடாமல் ஆர்டர் செய்து அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வை ஒழித்தாக வேண்டும்; நீட் மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர் போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற்றது. அப்பேரணி மீது போலீசார் கடுமையான அடக்குமுறைகளை ஏவிட்டனர். இதனையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய ஜந்தர் மந்தரிலேயே தங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் பிளிங்கிட் (Blinkit) போன்ற செயலிகள் மூலம் உணவுகள், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனிலேயே முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்து அனுப்பி வைக்கின்றனர்.
மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்ற நபர், ஜந்தர் மந்தரில் பசியுடன் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு வழங்குவதற்காக சொமாட்டோ மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தார். கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் உணவுப் பொட்டலத்துடன் வந்த அந்த சொமாட்டோ டெலிவரி ஊழியர், “மும்பையில் இருந்து அனுஜ் ராவத் என்பவர் பணம் செலுத்தி அனுப்பியுள்ளார்; ஜந்தர் மந்தரில் பசியோடு இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இதை வழங்கலாம் என்று கூறினார்” எனத் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
