தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் கடற்பரப்பு போர்க்களமாகிவிடும் என முதல்வர் விஜய்க்கு (CM Vijay) இலங்கை தமிழ் மீனவர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 21) யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2 நாட்களுக்கு முன்னர் இந்திய மீன்பிடி படகு எங்கள் பகுதியில் புங்குடு தீவு பகுதியில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. அனலை தீவு தொடங்கி புங்குடு தீவு வரை ரூ.8 கோடி அளவுக்கு எங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களுடைய படகுகளையும் வலைகளையும் இந்திய மீனவர்கள் நாசமாக்கிவிட்டு போயுள்ளனர்.
எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளான தமிழக மீனவர்களின் இந்த செயலால் எங்களது வாழ்வாதாரம் முடங்கிப் போய்விட்டது. இதனை நாங்கள் யாரிடம் போய் சொல்வது?
தமிழக மீனவர்களை எங்களுடைய கடற்படையோ, கடற்றொழில் அமைச்சரோ கட்டுப்படுத்தவில்லை. இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. தமிழக மீனவர்கள் தாக்குதல் நடத்தும் போது இலங்கை கடற்படையினர் கரையில் நின்று வேடிக்கைதான் பார்க்கின்றனர்.
இதனால் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை, அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
நாங்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு பணிவாக வேண்டுகோள் வைக்கிறோம்.. காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து எங்களுடைய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வராமல் நீங்கள்தான் தடுக்க வேண்டும்.
அப்படி நீங்கள் தடுக்காமல் போனால் கடலில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் மோதும் நிலைமை வரும்; கடல் போர்க்களமாகும். அப்படியான நிலைக்குதான் எங்கள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா கூறினார்.
