மதுரை,கோவை மெட்ரோ விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து இன்று (நவம்பர் 21) மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையைத் தொடர்ந்து மதுரை , கோவை ஆகிய தலைநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது
மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கும், கோவையில் 10 ஆயிரத்து 740 கோடி மதிப்பீட்டில் 39 கிலோமீட்டர் தொலைவிற்கும், மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கையானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய வீட்டு வசதி நகர்ப்புற அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விரிவான திட்ட அறிக்கையில் ஆய்வு செய்த மத்திய அரசு கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பியது. இதனை ஏற்று தமிழக அரசு கடந்த 2024 பிப்ரவரி மாதம் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது.
ஆனால் தற்போது மத்திய அரசு மக்கள் தொகையை காரணம் காட்டி மதுரை மற்றும் கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலாக பாஜக அரசு திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சிப்பதாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கோவையில் தொடங்கிய தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்த நிலையில் மெட்ரே திட்ட ரத்து நடவடிக்கைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்ப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன் படி கோவையில் நேற்று மத்திய அரசைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்நிலையில் இன்று மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து மதுரை திமுக மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மதுரை, கோவைக்கு மெட்ரோ திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், AIIMS உம் வராது, மெட்ரோ ரயில் – ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல் நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்… அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!” என தெரிவித்துள்ளார்.
