காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்கள் கற்பனை செய்து பார்த்திராத வகையில், கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 24) எச்சரித்துள்ளார்.
பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி காஷ்மீர் தாக்குதல் குறித்து பேசும்போது,
“இந்த பிகார் மண்ணில் இருந்து முழு உலகிற்கும் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீர் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டுபிடித்து நிச்சயமாக அவர்களை தண்டிப்போம்.
அவர்களை இந்த உலகத்தை விட்டு அகற்றுவோம். பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதத்தை தண்டிக்காமல் விடமாட்டோம். நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதியான நிலைப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் நிற்கிறார்கள். இந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
இந்த சம்பவத்தால் இந்தியா சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்து பார்த்திராத வகையில் மிக கடுமையாக தண்டனை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.