’சாஹோ’ தந்த சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கிட்டத்தட்ட ஒரு வார காலத்தில் உலகம் முழுக்க 270 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. இதையொட்டி ஹைதராபாதில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், அப்படத்தில் இடம்பெற்ற கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
அதில் பேசிய நாயகன் பவன் கல்யாண், இயக்குனர் த்ரிவிக்ரம் மூலமாகச் சுஜீத் தனக்கு அறிமுகமானதாகத் தெரிவித்தார்.
“ஜப்பான்ல இருக்குற ஒரு கேங்ஸ்டரா இந்த படத்துல வர்றீங்க. வாள், துப்பாக்கியால சண்டை போடுறீங்கன்னு கதை சொன்னார். அவர் சொன்ன கதையை என்னால புரிஞ்சுக்க முடியலை. ஆனால், அவரோட நோட்ஸை எல்லாம் என்னோட மகன் ஜாலியா படிச்சுட்டு இருந்தான். அப்போதான், இந்த தலைமுறைக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒரு விஷயம் இந்த கதையில இருக்குறதா புரிஞ்சுக்கிட்டேன்” என்று கூறினார்.
’ஓஜி’யின் வெற்றியைச் சிலாகித்த பவன் கல்யாண், “நிச்சயமாக இந்த படத்திற்கு ப்ரீக்யூல், சீக்யூல் வரும். ஒரு படம் தோல்வியடையறப்போ எந்தளவுக்கு விரக்தி வரும்னு எனக்குத் தெரியும். ஆனால், ஓஜி எனக்கு அடுத்தடுத்து படம் நடிக்கணும்கற உத்வேகத்தைத் தந்திருக்குது. அதனால, ஓஜி உலகத்தை நாங்க தொடரப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

ஜப்பானில் சாமுராய் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது இளைஞன் அங்கிருக்கும் கேங்ஸ்டர் கூட்டத்தின் வேட்டையில் இருந்து தப்பித்து, மும்பையில் துறைமுகம் ஒன்றை நடத்திவரும் தொழிலதிபருக்கு உதவிகரமாக இருப்பதுதான் ‘ஓஜி’யின் கதை. இதிலேயே ஏகப்பட்ட பிளாஷ்பேக்குகள் உண்டு. அதற்கேற்ப, 1970 முதல் 1993 வரை வெவ்வேறு காலகட்டத்தில் சம்பவங்கள் நிகழ்வதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
பவன் கல்யாண் சொன்னதைப் பார்த்தால், 1993க்குப் பிறகு மும்பையில் என்ன நடந்தது என்பது ஒரு பாகமாகவும், 1970க்கு முன்னர் ஜப்பானில் என்ன நடந்தது என்பது இன்னொரு பாகமாகவும் வெளியாகும் என்று தெரிகிறது.
‘ஓஜி படம் பவன் கல்யாணை ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறது’ என்று மகிழ்கின்றனர் அவரது ரசிகர்கள்.
அதேநேரத்தில், இப்படத்தில் நிறைந்திருக்கும் வன்முறைக் கறைகளைச் சமூகவலைதளங்களில் கழுவி ஊற்றுபவர்களும் நிறைய. காரணம், பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் இருப்பது தான்.
அதைப் பத்தி பவன் கல்யாண் ஒரு வார்த்தை கூட பேசலையே’ என்பது அவர்களது வருத்தமாக இருக்கும்..!
