ஆந்திராவிலும் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் கடந்த சில ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் முடிவுக்கு வந்து தற்போது தந்தையும் மகனும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.
தொடர்ந்து, தனது பிறந்த நாளன்று அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அறிவித்தார்.
இந்த சூழலில் இன்று (ஜூலை 29) சென்னை மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாமக தலைவராக மீண்டும் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவிலும் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். அந்த மாநில மக்கள் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் . இதற்கான வேலைகள் கடந்த மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. வரும் சனிக்கிழமை அன்று ஒரு நூறு பேர் பனையூர் அலுவலகத்துக்கு வந்து பார்க்க உள்ளார்கள். ஆந்திராவில் உள்ள அத்தனை மாவட்டங்களில் இருந்தும் வருகிறார்கள்” என்று கூறினார்.
