கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பம்பை நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலைக்கு வருவதை தவிர்க்குமாறு அய்யப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் பொன்முடி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
பம்பை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் சீறிப் பாய்கிறது. இதனையடுத்து நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் வருவதை சில நாட்களுக்கு தவிர்க்குமாறு தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
