தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன்அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன் கள் இறக்கியதாக கூறி எஸ் ஐ இசக்கி ராஜா சுட்டு பிடித்தார்.
இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் எனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்ஐ இசக்கி ராஜா மற்றும் போலீசார் பனைத்தோப்புக்கு அழைத்துச் சென்று மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா என சோதிக்க கட்டாயப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து தான் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இந்த வழக்கை போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த சூழலில் இந்த மனு இன்று (ஜூன் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்ஐ இசக்கி ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘நம் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கள் விற்பனை செய்யப்படுகிறது. கனிமம் டாஸ்மாக் உள்ளிட்டவைகளில் அரசு கவனம் செலுத்தி வருவாய் ஈட்டுகிறது.
எனவே கள் விற்பனையை அரசு ஏன் அனுமதிக்க கூடாது. ஒரு செயல் திட்டத்தை வகுத்து கள் விற்பனைக்கு அனுமதிக்கலாம். வருவாயும் கிடைக்கும்.
இதுகுறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
