பழனியில் (பழநி) ரூ100 கோடி கோவில் நிலம் மோசடி விவகாரத்தில் 20 கேள்விகளையும் 10 குற்றச்சாட்டுகளையும் திமுக முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோவில் கார் பார்க்கிங்கிற்காகப் பயன்படுத்தப் பட்டது. ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியாளிக்கிறது. இதன் பின்னால் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.

20 கேள்விகள்
- கோவில் நிலம் என்று ஏற்கனவே கடிதம் அளிக்கப்பட்டிருந்தும், அதை மீறிப் பதிவு செய்தது எப்படி?
- பழனிக்கு அருகிலுள்ள சப்-ரிஜிஸ்டர் அலுவலகங்களை விட்டுவிட்டு, 70 கி.மீ தொலைவில் உள்ள கொடைக்கானல் அதிகாரியை அவசரமாக அழைத்து வந்தது ஏன்?
- பத்திரப்பதிவு நடந்த அன்று, அந்த அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தது எப்படி?
- சிட் பண்ட் (Chit fund) பிரிவு அதிகாரிக்கு, நிலப் பத்திரப் பதிவிற்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது ஏன்?
- முன்னதாக அந்தப் பதிவை நிராகரித்த சப்-ரிஜிஸ்டர் பாலசுந்தரம், திடீரென விடுப்பில் சென்றது ஏன்? அவரை விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன்?
- சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை உடனடியாகக் கைது செய்யும் அரசு, முறைகேடாக நிலம் பதிவு செய்த அதிகாரியைக் கைது செய்யாதது ஏன்?
- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பத்திரப் பதிவுத்துறை அமைச்சரும் ஏன் வெவ்வேறு கருத்துகளைக் கூறுகின்றனர்?
- “அறியாமையினால் அதிகாரிகள் பதிவு செய்துவிட்டனர்” என்று விசாரணைக்கு முன்பே அமைச்சர் ஏன் நற்சான்றிதழ் வழங்குகிறார்?
- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்வைக்கும் வாதத்திற்கும், அமைச்சர்களின் பேட்டிக்கும் இவ்வளவு முரண்பாடு இருப்பது ஏன்?
- நில மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமைச்சர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?
- அரசியல் சர்ச்சைகளை உருவாக்கி, உண்மையான மோசடியைத் திசைதிருப்ப அமைச்சர்கள் முயற்சிப்பது ஏன்?
- சொத்தை வாங்கியதாகக் கூறப்படும் நபர்களின் பொருளாதாரப் பின்புலம் என்ன? அவர்களால் 2 கோடி ரூபாயைப் புரட்ட முடிந்தது எப்படி?
- அந்த 2 கோடி ரூபாய் பணம் யாருடையது? இதன் பின்னால் உள்ள உண்மையான முதலீட்டாளர்கள் யார்?
- பினாமி பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டதற்குப் பின்னால் உள்ள “பெரிய சக்தி” எது?
- 15 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் டியூட்டி ஆன்லைனில் செலுத்தப்பட்டுள்ளது; அந்தப் பணம் யாருடைய கணக்கிலிருந்து வந்தது?
- சட்டரீதியான மற்றும் நிர்வாகக் கேள்விகள்
“ஆவணங்கள் சரியாக இருந்ததால் பதிவு செய்தோம்” என்று கூறும் அரசு, கோவில் நிலத்தின் மீதான தடைக் கடிதங்களை ஏன் கவனிக்கவில்லை? - கடந்த ஆட்சியில் கோவில் பயன்பாட்டிற்குத் தரப்பட்ட நிலம், தற்போது எப்படித் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டது?
- நிலத்தை மீட்டெடுக்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அப்பீல் செய்வதற்கு ஏன் காலதாமதம் செய்யப்பட்டது?
- ஊழலை ஒழிப்பதாகக் கூறும் அரசு, வெளிப்படையான ஆதாரங்கள் இருக்கும் இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறது?
- இந்த நில மோசடி தொடர்பாக சிபிஐ அல்லது உயர்நீதிமன்றக் கண்காணிப்பிலான சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு அரசு தயாரா?
10 குற்றச்சாட்டுகள்
- கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே எதிர்ப்பு கடிதம் அளிக்கப்பட்டிருந்தும், அந்த நிலத்தை அதிகாரிகள் முறைகேடாகப் பதிவு செய்துள்ளனர்.
- பத்திரப்பதிவு நடந்த அன்று, அலுவலகப் பணியாளர்கள் திட்டமிட்டு விடுப்பு எடுத்துள்ளனர், மேலும் தொலைதூர கொடைக்கானல் அதிகாரியை அழைத்து வந்து அவசரமாகப் பதிவு செய்துள்ளனர்.
- பொருளாதார வசதி இல்லாத இருவரின் பெயரில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பினாமி முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விசாரணை தொடங்குவதற்கு முன்பே, “அறியாமையினால் நடந்தது” என்று கூறி அமைச்சர்கள் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.
- இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் ஆகிய இருவரும் இந்த விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகின்றனர்.
- நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒரு கருத்தையும், அமைச்சர்கள் பொதுவெளியில் மற்றொரு கருத்தையும் கூறி முரண்படுகின்றனர்.
- இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள அழுத்தத்தைப் பயன்படுத்திய அதிகாரிகளை இதுவரை கைது செய்யாமல் அரசு மெத்தனமாக உள்ளது.
- நிலத்தை வாங்கியதாகச் சொல்லப்படும் நபர்களிடம் அத்தனை பணம் எங்கிருந்து வந்தது என்பது மர்மமாக உள்ளது; இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் உள்ளது.
- சமூக வலைதளங்களில் உண்மைகளைப் பேசுபவர்களைக் கைது செய்து, மக்கள் கவனத்தை மோசடியிலிருந்து திசைதிருப்ப அரசு முயல்கிறது.
- தி.மு.க ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட கோவில் நிலம், இந்த ஆட்சியில் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் கூறினார்.
