2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. 6 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் கிட்டத்தட்ட தங்கள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டன.
மறுபுறத்தில், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள், 5 போட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இந்நிலையில், இதற்கு இடைப்பட்ட இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 அணிகளுக்கு இடையே, அரையிறுதிக்காக ஒரு பெரிய போரே நிகழ்ந்து வருகிறது.

இப்படியான சூழலில், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புகளை உயிரோட வைத்திருக்க வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த வங்கதேச வீரர்களுக்கு துவக்கத்திலேயே ஷாஹீன் அப்ரிடி – ஹாரிஸ் ராஃப் அதிர்ச்சி அளித்தனர்.
போட்டியின் 6 ஓவர்களிலேயே தன்சித் ஹசன், நஜ்முல் ஷன்டோ & முஷ்ஃபிகூர் ரஹீம் தங்களது விக்கெட்களை இழந்து வெளியேறினர்.
அடுத்து ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் – முகமதுல்லா, அணியை விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டனர்.
லிட்டன் தாஸ் 45 ரன்களுக்கும், முகமதுல்லா 56 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாகிப் அல் ஹசான் 43 ரன்களை சேர்த்தார்.
பின் மெஹ்தி ஹாசன் மிராஸ் மட்டுமே அணிக்காக சற்று பொறுப்பாக விளையாடி 25 சேர்த்த நிலையில், வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

இதை தொடர்ந்து, 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, தேவையான அதிரடி துவக்கத்தை அப்துல்லா ஷஃபீக் – ஃபகர் ஜமான் ஜோடி வழங்கியது. இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 128 ரன்கள் சேர்த்தனர்.
அப்துல்லா ஷஃபீக் 68 ரன்களுக்கும், ஃபகர் ஜமான் 81 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ரிஸ்வான் (26 ரன்கள்) மற்றும் இஃப்திகார் அகமது (17 ரன்கள்) அந்த அதிரடியை தொடர்ந்து, 33வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டினர்.
தனது, அபார ஆட்டத்திற்காக ஃபகர் ஜமான் இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடையேயான அரையிறுதிக்கான மோதல் மேலும் சுவாரசியம் அடைந்துள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்ன?
அடுக்குமாடிக் குடியிருப்புக்கான மின் கட்டண குறைப்பு எப்போது?
![]()
