ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்கம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். Pahalgam terrorist attack
சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களில் பலர் படுகாயம் அடைந்திருப்பதால் உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா அதிபர் புதினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான தாக்குதல் இது. மிருகத்தனமான இந்த குற்றத்திற்கு எந்த நியாயமும் கிடையாது. தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யா தொடர்ந்து வழங்குகிறது.
அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Pahalgam terrorist attack
