சண்முக பாண்டியன் ‘ஹீரோயிசம்’ எடுபடுகிறதா? Padai Thalaivan Movie Review
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் எப்படிப்பட்ட ரசிகர்களைப் பெற்றிருந்தார் என்பது முந்தைய தலைமுறைக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் இப்போது எப்படித் தங்களது நாயகனைப் போற்றுகின்றனர் என்பதைக் காட்டியது ‘லப்பர் பந்து’. அதில் நாயகர்களில் ஒருவரான தினேஷ், அவரது ரசிகராகத் திரையில் தோன்றியிருந்தார். அந்த காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பே விஜயகாந்தின் திரையிருப்பு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டதைச் சொல்லும். Padai Thalaivan Movie Review
அதனாலேயே, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கிற ‘படைத் தலைவன்’ மீது எதிர்பார்ப்பு அதிகமானது. அது அவரது குடும்பத்தினருக்கு, கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களைக் கவனிப்பவர்களுக்குப் புரிகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது ‘படைத் தலைவன்’ திரைப்படம். Padai Thalaivan Movie Review
சரி, அப்படியென்ன அனுபவத்தைத் தருகிறது இப்படம்?

‘கும்கி’ பாணி கதை! Padai Thalaivan Movie Review
ஏழ்மையில் வாடுகிற ஒரு குடும்பம். தாயில்லாமல் தவிக்கிற அந்த குடும்பத்தைத் தாங்கிப் பிடித்து வருகிறார் தந்தை. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். Padai Thalaivan Movie Review
இவர்களோடு ஒரு யானையையும் பிள்ளையாகக் கருதி வளர்த்து வருகிறார் அந்த தந்தை. உண்மையைச் சொன்னால், குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தவர் அவரது மனைவிதான். Padai Thalaivan Movie Review
ஒருநாள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாததால், வீட்டு வாசலில் அந்த தந்தையை நிற்க வைக்கிறார் கடன் கொடுத்தவர். நிற்பது என்றால் உணவு, நீர் எதுவுமின்றி ஒரே இடத்திலேயே இருப்பது. Padai Thalaivan Movie Review
இருவரும் உறவினர்கள் தான். ஆனாலும், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற கொள்கையைக் கொண்டவர் எதிராளி. அதனால், அந்த தந்தை அக்கஷ்டத்தைத் தாங்கிக் கொள்கிறார்.
அந்த அவமானத்தைக் காணச் சகிக்காமல், தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் கேட்கிறார் மகன். ஒருவழியாகப் பணத்தைத் திரட்டிக்கொண்டு வந்து, கடனைத் திருப்பிச் செலுத்தி, தந்தையை அழைத்துப் போகிறார்.
அதன் தொடர்ச்சியாக, ’நம்ம யானையை சினிமா ஷுட்டிங் அனுப்பிச்சா நல்லாவே பணம் வரும்ல’ என்று ஐடியா தருகிறார் அந்த மகனின் நண்பர்களில் ஒருவர்.
தந்தைக்கு அதில் இஷ்டமே இல்லை. ஆனாலும், ஒருமனதாகச் சம்மதிக்கிறார். ஆனால், படப்பிடிப்புக்கு யானை வேண்டும் என்று சொல்லி அலைந்து கொண்டிருந்த நபரோ, ‘உங்க யானைக்கு ட்ரெய்னிங் கொடுத்தா தான் தேறும். அதுவரைக்கும் கல்யாணம், திருவிழாவுக்கு வேணும்னா கூட்டிட்டு போகலாம்’ என்கிறார்.
அவர் சொன்னதை அசை போடும் அந்த மகன், ஒரு கல்யாண வைபவத்திற்கு யானையை அழைத்துச் செல்கிறார். ஆனால், அதற்குள் கடன் கொடுத்த நபர் ‘சூதுவாது’டன் சில காரியங்களைச் செய்கிறார். அதனால், யானைக்கு மதம் பிடிக்கிறது. அந்த விஷயம் வீடியோவில் பதிவாகி நாடெங்கும் ‘வைரல்’ ஆகிறது.
அதன்பிறகு என்ன ஆனது? அந்த யானையைத் தொடர்ந்து வளர்ப்பதில் அந்த தந்தையும் மகனும் சிக்கலை எதிர்கொண்டார்களா என்று விவரிக்கிறது ‘படைத் தலைவன்’ படத்தின் மீதி. மொத்தப் படமும் நமக்கு ‘கும்கி’யை நினைவூட்டுகிறது.
பிரபு சாலமோன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகம் ஆன ‘கும்கி’க்கும் ‘படைத்தலைவன்’ படத்திற்கும் பெரிதாகச் சம்பந்தம் இல்லை தான். நாயகனுக்கும் அவர் வளர்க்கிற யானைக்குமான பந்தம் பிரதானமாகக் காட்டப்பட்டுள்ளது உட்பட ஒரு சில ஒற்றுமைகள் இரண்டிலும் உண்டு.
என்ன, ‘கும்கி’யை விட ‘படைத்தலைவன்’ கதையில் லாஜிக் மீறல்களைத் தனியாகப் பட்டியலே போடலாம். அது முக்கியமான வித்தியாசம்.
படம் ஈர்க்கிறதா? Padai Thalaivan Movie Review

சீரியசான முகத்துடன் ‘ஆக்ஷன் ஹீரோ’ அந்தஸ்தை எட்டிப் பிடிக்க முயற்சிப்பவர்களுக்கு தமிழ் திரையுலகில் இருக்கிற முதலாவது உதாரணம் விஜய் ஆண்டனி. முகபாவனைகளில் பெரிதாக அவர் மாறுதல்களைக் காட்டாவிட்டாலும், தான் ஒப்புக்கொண்ட கதைக்கு, பாத்திரத்திற்கு நேர்மை செய்யும் விதமாகத் திரையில் தோன்றுவார். படம் முழுக்க அதனை ‘மெயிண்டெய்ன்’ செய்துவிடுவார். Padai Thalaivan Movie Review
அந்த பாணியில் சண்முக பாண்டியன் மிக எளிதாக ‘ஆக்ஷன் ஹீரோ’ ஆகலாம். இடைவேளை சண்டைக்காட்சியில் வெளிப்படுகிற அவரது ஆக்ரோஷமே அதனைச் சொல்லிவிடுகிறது. ஹீரோயிசம் இயல்பாகவே அவருக்குக் கைவருகிறது. ஆனால், அதற்கேற்ற கதையை, காட்சிகளை அவர் தேர்ந்தெடுத்தாக வேண்டியது கட்டாயம் என்கிறது ‘படைத் தலைவன்’. Padai Thalaivan Movie Review
சண்முக பாண்டியனோடு கஸ்தூரி ராஜா அவரது தந்தை பாத்திரத்தில் வருகிறார். செயற்கைத்தனம் தெரியாவிட்டாலும் கூட, அவரது நடிப்பு சட்டென்று மனதோடு ஒட்டுகிற வகையில் அமையாதது ஒரு குறையே.
முன்பாதியில் லோகு என்பிகேஎஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ் போன்றோர் வந்து போகின்றனர்.
பின்பாதியில் அருள்தாஸ், முனீஸ்காந்த், ரிஷி ரித்விக், யாமினி சந்தர் ஆகியோரோடு ‘வில்லனாக’ வரும் கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜுவும் தோன்றியிருக்கிறார்.
‘இதில் நான் தானா நாயகி’ என்பது போலவே வந்து போயிருக்கிறார் யாமினி. அவர் அணிந்திருக்கிற ஆடை பழங்குடியினருடையது என்று சொன்னால் பெரியளவில் அம்மக்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பும்.
அருள்தாஸுக்கு இதில் டப்பிங் கொடுத்தவர் நம்மைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார். முனீஸ்காந்த் சீரியசாக நடிக்கிறேன் என்று ஒருவழியாக்குகிறார். ‘டைனோசர்’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் தலைகாட்டிய ரிஷி ரித்விக்கும் அப்படியொரு நிலைக்கே உள்ளாக்குகிறார்.
இது போகச் சிலர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர். திரையில் அவர்களுடைய பங்கு என்னவென்று இயக்குனர் அன்பு உட்பட எவருமே அவர்களுக்குச் சொல்லவில்லை.
இது போக ‘ரமணா’ ஹேங் ஓவரில் இருப்பதாக யூகிசேதுவைக் காட்டியிருக்கிறது படக்குழு. மறைந்த விஜயகாந்தும் ஒரு காட்சியில் வந்து போவதாகக் காட்டியிருக்கின்றனர். அந்த காட்சிகள் ‘ஏஐ நுட்பத்தில் அமைந்தது’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அவை அனிமேஷன் தரத்தில் தோற்றமளிக்கின்றன.
திரையில் அந்த இடம் வந்தபோது, ‘இதை இட்லின்னு சொன்னா சட்னியே நம்பாது’ வசனமே நினைவுக்கு வந்தது. என்ன கொடுமை சார் இது?
இதெல்லாம் போதாது என்று ‘பொட்டு வைத்த தங்கக்குடம்’ பாடலை ஒரு சண்டைக்காட்சியின் பின்னணியில் பயன்படுத்தியிருக்கிறது படக்குழு.
விஜயகாந்தின் புகழ் பெற்ற பாடலொன்றை அவரது மகன் நடிக்கிற காட்சிகளில் இடம்பெறச் செய்வது தவறல்ல. ஆனால், இந்த படத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம் விஜயகாந்த் ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலானது.
இந்த படத்தின் பெரிய பலமாக எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அது வெளிப்படையாகத் தெரிகிறது.

படத்தைத் தொகுத்திருக்கும் எஸ்.பி.அகமதுவுக்கு இயக்குனர் ‘இதுதான் கதை’ என எதையாவது சொன்னாரா என்று தெரியவில்லை. காட்சிகள் இஷ்டத்திற்கு ‘ஜம்ப்’ ஆகின்றன.
கலை இயக்குனர் ராஜு பின்பாதியில் சில செட்களை நமக்கு காட்டுகிறார். சீரியசாக திரையின் முன்னே அமர்ந்திருப்பவர்களுக்கு அது ‘மீம்ஸ் மெட்டீரியலாகவே’ தெரிகிறது.
இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. அவரது இசை பாணி சில இடங்களில் தலைகாட்டுகிறது; அவரது ரசிகர்கள் அதனை மட்டுமே நோக்கித் திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது.
’படைத் தலைவன்’ படத்தின் கதையை இயக்குனர் அன்பு அமைத்திருக்கிறார். அதற்கு திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார் பார்த்திபன் தேசிங்கு.
‘யானைக்கும் நாயகனுக்குமான பிணைப்பு’ என்ற வார்த்தைகளை மட்டுமே நம்பியிருக்கிறது இந்த கூட்டணி. மற்றபடி பாத்திர வார்ப்பு, காட்சியமைப்பு, அதன் ஆக்கம் என்று எதிலும் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது உள்ளடக்கம்.
‘படைத் தலைவன்’ கதை தொடக்க கட்டத்தில் என்னவாக இருந்தது? இப்போது திரையில் எப்படிப்பட்டதாக வெளிப்பட்டிருக்கிறது? இவ்விரண்டையும் அறிந்தவர்களுக்கே இடையில் நடந்த குளறுபடிகள் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியும்.
முதன்முறையாகத் திரையில் அந்த கதை சொல்லலை எதிர்கொள்கிறவர்கள், ‘ஏன் இப்படி எங்கெங்கோ தாவுகிறது கதை’ என்பது மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் தோன்றும். படம் முடிந்தபிறகு அந்த எண்ணம் அதிகமாகிறதே தவிர குறையவில்லை.
சண்முக பாண்டியன் தான் நடிக்கிற படங்களின் கதையைக் கேட்கத் தனியாக ஒரு ‘கதை இலாகா’ உருவாக்குவது அவருக்கு நலம் பயக்கும். ’படைத் தலைவன்’ அவருக்கும் நமக்கும் சொல்கிற சேதி அதுதான்..!