ஓமன் கடற்பரப்பில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்தியாவுக்கான ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது.
ஓமன் கடற்பரப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) ஆகிய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்; இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 6 பேர் இந்தியர்கள்; 2 பேர் உக்ரேன் நாட்டவர். படுகாயமடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தகைய சம்பவங்கள் “மிகவும் கவலைக்குரியவை” என்று கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பதற்றத்தைத் தணிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச கடல் வழிகளில் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்தியாவுக்கான ஈரான் தூதருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதன் அடிப்படையில் ஈரான் துணைத் தூதர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
