மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உலகளாவிய எரிசக்தி (Petrol Price) விலைகளில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனங்களில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) போன்ற பொதுத்துறை பெட்ரோலிய சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கடந்த 10 வாரங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை (LPG) பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகின்றன.
இதன் காரணமாக, அவை தினசரி ரூ.1600 கோடி முதல் ரு. 1700 கோடி வரை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்த போதிலும், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இரண்டு வருடப் பழைய அளவிலேயே நீடிக்கின்றன. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.77 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 87.67 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதற்கிடையில், மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது.
பெட்ரோலிய நிறுவனங்கள் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கும், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இப்போது அதிக நடைமுறை மூலதனத்தைத் திரட்ட வேண்டியிருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வு நீண்ட காலத்திற்கு நீடித்தால், நிறுவனங்கள் சில மூலதனச் செலவுத் திட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டியிருக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இருப்பினும், சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம், எரிசக்தி பாதுகாப்பு உள்கட்டமைப்பு, எத்தனால் கலப்பு, உயிரி எரிபொருட்கள் மற்றும் எரிசக்தி மாற்றம் தொடர்பான முக்கிய திட்டங்கள் அரசு ஆதரவுடன் தொடரும். பெட்ரோலிய நிறுவனங்களின் நிதி நிலைமையில் தொடரும் அழுத்தம், சுத்திகரிப்பு நிலையங்கள், குழாய் வழிகள், முக்கிய சேமிப்பு மற்றும் தூய்மையான எரிபொருள் திட்டங்களில் எதிர்கால முதலீடுகளைப் பாதிக்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது குறித்த முடிவு இப்போது அரசு மட்டத்தில் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் அதன் அளவு மற்றும் நேரத்தை அரசே தீர்மானிக்கும். மேற்கு ஆசிய நெருக்கடியைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. அதே வேளையில் இந்தியாவில் விலைகள் நிலையாக உள்ளன.
