தமிழகத்தில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட ஐந்து தொகுதிகள் தொடர்பான தேர்தல் மனுக்கள் மீது முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாலும், திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததாலும் தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், “காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
எனவே 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 151-ன் கீழ், தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் காலியானது இல்லை” என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
வேட்பாளர்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தடை விதித்தது.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ”உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் தவறானது என்று முதல்வர் விஜய் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் இந்த தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உட்பட சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை இந்த ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
