சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சென்னையில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், தலைமைச்செயலகம் மற்றும் சட்டசபை கட்டடம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் இதற்கானப் பணிகள் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதிய தலைமைச் செயலகம் கட்ட, சென்னை, பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், 25.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், இது குறித்து எந்தவொரு கொள்கை முடிவும் எட்டப்படவில்லை என்றும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் இன்னும் கொள்கை முடிவு எட்டப்படவில்லை; அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. இவை எல்லாமே வெறும் சுவாரஸ்யமான தகவல்களாகத்தான் இருக்கின்றனவே தவிர, தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வாயிலாக புதிய சட்டமன்றம் கட்டப்பட இருக்கிறது என்கிற எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை. அதனால் அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் விதி 110-ன் கீழ் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் விஸ்வநாதனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
