நீட் வினாத்தாள் மோசடி (Neet) விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை NTA-க்கு உச்சநீதிமன்றம் (Superme Court) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இம்மோசடி தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மே 25-ந் தேதி விசாரித்தது.
இந்த விசாரணையின் போது நீதிபதி நரசிம்மா,
- நீட் முறைகேடுகளைத் தொடர்ந்து உயர்நிலை குழு அமைக்க கடந்த முறை உத்தரவிட்டோம்.
- அக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் தேசிய தேர்வு முகமை பாடங்களை கற்றுக் கொள்ளாதது வருத்தம் தருகிறது என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், “நீட் தேர்வு மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தமது பரிந்துரைகள் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2024-ம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கே.ராதாகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
