தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கடுங்குற்றச் செயல்களில் (Crimes) ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப்பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் (Vijay) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று மே 25-ந் தேதி தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், “பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்று முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
மேலும், “வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்” என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மஹேஷ்வர் தயாள், காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹுசைன், காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ராஜேஸ்வரி, காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஆஸ்ரா கர்க், காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) பவானீஸ்வரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
