கோவையில் உள்ள பிரபல கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் லேசான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று சிகிச்சைக்கு பின் டிஸ்டார்ஜ் செய்யப்பட்ட அவர் சென்னை கிளம்பினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மே 25) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “8 மாதகாலமாக கடுமையான உழைப்பு. ஆண்டுக்கு இரு முறை உடல் பரிசோதனை செய்வது வழக்கம். 8 மாதம் ஆனதால் தங்கி பரிசோதனை செய்து கொண்டேன்.
மாஸ்டர் செக் அப் என்ற அடிப்படையில் மருத்துவமனையில் தங்கி அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனை முடிவுகளும் சரியாக இருக்கின்றது என்ற ஒப்புதலை மருத்துவமனை வழங்கியிருக்கிறது.
விரைந்து அனைத்து பணிகளும் செய்வதற்கு சென்னை சென்று கொண்டு இருக்கிறேன்” என்றார்.
அரசு மருத்துவமனைக்கு ஏன் சிகிச்சைக்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு, “என்னைப் பொறுத்தவரை இது என் உறவினர் மருத்துவமனை. எப்பொழுதும் இங்கே சிகிச்சை பெறுவது தான் வழக்கம். இங்கு வந்தால் ஓய்வு எடுப்பது அங்குதான். அந்த முறையைத்தான் இப்போதும் பின்பற்றுகின்றேன்.
உறவினர் மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கின்ற சலுகை. வேறு மருத்துவமனையில் சென்று பெற வேண்டிய நிலை இல்லை. என் உறவினரின் மருத்துவமனை அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றது. நான் வரும்போது இங்கே தான் விடுதியில் தங்கி இருந்து செல்கின்றேன். இது தொடர்ந்து நடைபெறுகின்ற ஒரு நிகழ்வு” என்றார்.
சிறுமி கொலை வழக்கு பற்றி பேசுகையில், காவல்துறை மேற்கு மண்டல தலைவர் தெளிவாக விளக்கம் சொல்லி இருக்கின்றார். சட்டத்துறைக்கும், முதலமைச்சர் உத்தரவு வழங்கி இருக்கிறார். ஆகவே உடனடியாக அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.
மகளிர் விடியல் பயணம் எப்போது துவங்கும் என்ற கேள்விக்கு, “திமுக ஆட்சியில் எப்படி வழங்கினார்கள் , எத்தனை வருடங்கள் கழித்து வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக அரசு நிதி நிலைக்கு ஏற்ப வழங்கும். இது முதல்வர் முடிவு செய்ய வேண்டி ஒன்று, இந்த கேள்வியை என்னிடம் கேட்பது சரியாக இருக்காது.
அனைத்து திட்டங்கள் குறித்தும் முதல்வர் முடிவு செய்வார். முதல்வர் எந்தெந்த காலங்களில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
