டெல்லியில் தமிழக எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவும் டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கி நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இன்று காலை அவர் சாணக்கியபுரி பகுதியில் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஹெமெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், எம்.பி சுதாவின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சாணக்கியபுரி காவல் நிலையத்தில் சுதா எம்.பி. புகார் அளித்துள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
பாதுகாப்பு மிகுந்த தலைநகரான டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற எம்.பிக்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
