வரலாறு காணாத வகையிலான ‘சரக்கரை’ (Sugar) விலை உயர்வு பிரதமர் மோடி (Modi) தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
நாட்டின் சர்க்கரை விலை உயர்வுக்கு எதிராக மோடி அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: சர்க்கரையின் விலை,ஜூலை 20-ந் தேதி ஒரு கிலோவுக்கு ரூ. 48.18 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 20-ந் தேதி ஒரு கிலோவுக்கு ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது.
அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்குப் போதுமான சர்க்கரை கிடைப்பதையும் நிலையான விலையையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதைக் காரணம் காட்டுவது தவறானது.
உண்மையில், எத்தனால் தயாரிப்பிற்காகத் திருப்பிவிடப்படும் சர்க்கரையின் பங்கு, 2022-23-ல் சுமார் 12% ஆக இருந்ததிலிருந்து, 2025-26-ல் சுமார் 9% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இப்போது தானியங்களிலிருந்தே, குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
”சர்க்கரை நெருக்கடி”க்கு காரணம் என்ன?
- எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி
- பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அதிகரித்த தேவை
- கரும்புப் பயிரில் வானிலை தொடர்பான சேதம்
- உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம்
- பதுக்கல்
உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவே தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமாகும்.
- கரும்பில் ஏற்பட்ட சிவப்பு அழுகல்; நுனித் துளைப்பான் நோய்
- அதிக மழைப்பொழிவால் ஏற்பட்ட நீர் தேக்கம்
ஆகியவற்றால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை விநியோகத்தில் ஏற்படும் இறுக்கம் ஒரு உலகளாவிய நிகழ்வாகும், இது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல.
2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை நாடு முழுவதும் உள்ள சர்க்கரை வியாபாரிகளுக்கு 400 டன் சர்க்கரை இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
பதுக்கல், செயற்கையான பற்றாக்குறை ஆகியவற்றைத் தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுக்கள், ஆலைகளில் உள்ள சர்க்கரை இருப்புகளை நேரில் சரிபார்த்து வருகின்றனர் .
இறக்குமதி செய்ய அனுமதி
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டு இருப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
அக்டோபர் 15-ந் தேதி கரும்பு அரவையைத் தொடங்குமாறு மாநிலங்களுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதனால், அக்டோபர் மாத சர்க்கரை உற்பத்தி வழக்கமான 3-4 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 10 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உயர்ந்து, பண்டிகைக் காலங்களில் சர்க்கரை கிடைப்பது மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர், கரும்பு விவசாயிகள் ஆகிய இருவரின் நலன்களையும் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
