முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக இந்த அரசை ஆதரிக்கும் சிபிஎம் (CPM) கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
சேலம் போராட்டம்
சேலம் மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக தவெக அரசை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்யக் கோரியும் சிபிஎம் சார்பில் நேற்று (ஆகஸ்ட் 21) சேலம் கோட்டை மைதானத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஜய் அறிவிப்புக்கு எதிர்ப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “அனைத்தும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு அரசிடம் நிதியில்லை; ஆனால், அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவசக் கார்கள் வழங்க மட்டும் அரசிடம் நிதி இருக்கிறதா?

அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசக் கார் வழங்கும் இம்முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனம்
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப் பேரவையில் ”கற்பழிப்பு” எனப் பலமுறை கூறியுள்ளார். இது கண்டிக்கத் தக்கது. வல்லுறவு நடந்தால் பெண்ணின் கற்பு எப்படி பாதிக்கப்படும்? கற்பை இழப்பது அந்த ஆண் தான். கன்னிப் பேச்சு என்பதும் ஆணாதிக்க பிரதிபலிப்பே. அவைக் குறிப்பில் இருந்து நீக்கிட வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு முடிவுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துனர்களை நியமிப்பதற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சிந்தூரி மேனேஜ்மென்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு ஆணை வழங்கியிருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து துறையே நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து சிபிஎம்-ன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

சென்னையில் இன்று போராட்டம்
மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுத்திடவும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் ஆகஸ்ட் 22-ந் தேதி சைதாப்பேட்டையில் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தலைமைச் செயலாளர் நீடிக்க கூடாது
“அரசு நிர்வாகத்தை இடதுசாரி அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் முனைநோக்கிய நகர்த்தும் வெளிப்படையான முயற்சிதான் உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கை!
இடதுசாரிகளைக் குறிவைப்பது, உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் எதேச்சதிகாரச் செயல்பாட்டின் வெளிப்பாடு. இதன் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். தமிழக அரசே, உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடு!” என்று சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
