பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என எம்எல்ஏ சத்யா வலியுறுத்தினார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 31) எம்எல்ஏ சத்யா பேசுகையில், ” இன்று இளமை திருமணம் என்பது பரவலாக காணப்படுகிறது. மன பக்குவம் இன்மை, குடும்ப வறுமை சொந்த வீட்டுக்குப் போகக்கூடாது, சொத்துகள் வெளியே சென்று விடக்கூடாது போன்ற காரணங்களால் இந்த இளமைத் திருமணம் ஆங்காங்கே பரவலாக நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட 18 வயது உடையவர்களில் 25% பேர்கள் இந்த இளமைத் திருமணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த இளமைத் திருமணங்களில் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உடலாலும், மனதாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும், கணவன் மனைவிகளுக்கு இடையே பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை வந்து பிரிந்து வாழும் நிலை இன்று அதிகம் ஏற்படுகின்றது.
இன்னும் கொடியது ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது. அது இன்னும் பல்வேறு பிரச்சனைகளை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. நாங்கள் நேரடியாக களத்திற்க்குச் சென்று ஆய்வு செய்தோம்.
16 வயதில் திருமணம், 17 வயதில் குழந்தை, 18 வயதில் ஒரு வயது குழந்தை, அந்த 18 வயது குழந்தை ஒரு வயது குழந்தையோடு விளையாடுகிறது. இது ஆனந்த நிலை அல்ல, அவல நிலை.
ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடல் உபாதைகளால் அழுகிறது என்று கூடத் தெரியாத அளவுக்கு அந்த பல்வேறு பிரச்சனை உள்ளது.
ஆகவே, இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெண்ணின் திருமண வயது 18 என்கிற இந்த சட்டத்தை 20 அல்லது 21 வயதிற்கு கண்டிப்பாக உயர்த்தி தர வேண்டும்.
இது பல்வேறு மனப்பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய அந்த தீர்வுகளுக்கு தீர்வாக அமையும்.” என தெரிவித்தார்.
