வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: அமைச்சர் ரியாக்சன்!

Published On:

| By christopher

withdrawal of the bus strike

தொழிற்சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பொங்கல் விடுமுறைக்கு திட்டமிட்டபடி பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர்  சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வரும் 19ஆம் தேதி வரை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதனையடுத்து நாளை உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வேலூரில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்து இன்று (ஜனவரி 10) ஆய்வு நடத்தி வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ”சென்னை உயர்நீதிமன்றத்தில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முதல்வரின் அறிவுறுத்தலை பெற்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொங்கல் நேரத்தில் மக்களுக்கு பாதிப்பில்லாமல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் உத்தரவு. அதன்படி காலையில் காஞ்சிபுரத்திலும் இப்போது வேலூரிலும் ஆய்வு செய்து வருகிறேன்.

போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து பொங்கல் விடுமுறைக்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி மக்களுக்கு சிரமமின்றி அனைத்து பேருந்துகளும் இயங்கும்.

வரும் 19ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை சார்பாக மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதில் நீதிமன்றங்கள் கூறியுள்ள அறிவுறுத்தலின்படி நல்ல முடிவு எடுக்கப்படும்.

தொழிலாளர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அவர்கள் வைத்த 6 கோரிக்கையில் ஏற்கெனவே 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கருணை அடிப்படையில் 800-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதியதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற கோரிக்கைகளையும் மாநிலத்தின் நிதி நிலைமையை பொருத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்” என்று  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டெட் தேர்வு எப்போது?: வருடாந்திர அட்டவணை வெளியீடு!

இளையராஜா இசையில் ரஜினியின் “பேட்ட”!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share