ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேச வருடாந்திர கால அட்டவணை இன்று (ஜனவரி 10) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வும் டிஆர்பியால் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டில் என்னென்ன போட்டித் தேர்வுகள் நடைபெறும், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும், தேர்வு எப்போது நடைபெறும் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதித் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பாணை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 1,766 பணியிடங்களை கொண்ட இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 இடங்களுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. காலியாக உள்ள 200 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது என்று வருடாந்திர கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா