காவிரியின் குறுக்கே கட்டப்பட இருக்கும் ‘மேகதாது அணை’ குறித்து தமிழ்நாடு முதல்வர் விஜய்யிடன் தாம் பேசியதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
“India Today Roundtable Karnataka” நிகழ்ச்சியில் காவிரி பிரச்சனை குறித்து டி.கே.சிவகுமார் தெரிவித்த கருத்துகள்:
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களிடையேயான கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யிடன் மேகதாது அணை பற்றி பேசினேன். அப்போது, ”மேகதாது அணை தமிழ்நாட்டின் நலன்களையும் பெங்களூருவின் குடிநீரையும் பாதுகாப்பதற்காக மட்டும்தான்” கட்டப்படுவதாக தெளிவாகவே விஜய்யிடன் கூறினேன்.

”மேகதாது அணை திட்டம் என்பது கர்நாடகாவுக்கானது அல்ல; அது தமிழ்நாட்டுக்காகத்தான்.. மேகதாதுவில் சேமிக்கப்படும் தண்ணீரில் குறைந்தபட்சம் 95 சதவீதமானது தமிழ்நாட்டுக்குதான் பயன்படும். மேகதாது அணை நீரை கர்நாடகாவால் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது; பெங்களூருவின் குடிநீர் தேவைக்குதான் 10 டிஎம்சி நீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த மேகதாது அணையைக் கட்டினால் வெள்ளப் பெருக்கு காலங்களில் அதிகளவிலான நீர் கடலில் வீணாக கலக்காமல் இருக்கும். இது தமிழ்நாட்டுக்கான உயிர் நாடி திட்டம்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகா கட்டுப்பட்டு நடக்கும். அந்த தீர்ப்பை கர்நாடகா மதிக்கும். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடுவதால் எந்த ஒரு பயனும் கிடைக்காது; பேச்சுவார்த்தைகள்தான் சரியான தீர்வை கொடுக்கும்.
துங்கபத்திரா நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா- ஆந்திரா- தெலுங்கானா முதல்வர்கள் மூவரும் அமர்ந்து பேசுவதற்கு முடிவு செய்துள்ளோம். எங்கள் மாநிலத்தில் வேளாண் சாகுபடியை அதிகரிப்பதும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை தருவதும் எங்கள் கடமை. இவ்வாறு டிகே சிவகுமார் தெரிவித்தார்.
