திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு ‘வெள்ளை அடித்து வாடகைக்கு விட வேண்டும்’ என்று சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் (Thanga Tamilselvan) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின் போது 6 சிலிண்டர் வழங்குவோம் என்றார் முதல்வர் விஜய். ஆனால் இப்போது 3 சிலிண்டருக்கு வந்திருக்கிறார்; பாராட்டுகள். தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசம் என்றார், தற்போது மாவட்ட எல்லைக்குள் மட்டும்தான் பயணிக்க முடியும் என்கிறார். இதற்கு மேல் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அதாவது, சொன்னது ஒன்று, நடப்பது வேறொன்றாகத்தானே இருக்கிறது.

அண்ணா அறிவாலயத்துக்கு நாங்கள் வெள்ளை அடித்துக் கல்யாணத்துக்கு வாடகைக்கு விடுவோம்; அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு பெரிய இயக்கம்.. கடந்த 70 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல தடவை ஆட்சியில் இருந்து, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்று ஸ்டாலின் உள்ளிட்டோர் முதலமைச்சராகி பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாட்டிற்குக் கொடுத்திருக்கிறார்கள்.. இந்த இயக்கம் சாதாரணமான இயக்கம் அல்ல.
இவர்கள் இன்று புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளனர்; அந்த இறுமாப்பில் பல தவறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக வரக்கூடிய உள்ளாட்சிமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எல்லாவற்றிலும் திமுக கூட்டணிதான் மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை மக்கள் தங்களின் தீர்ப்பாக வழங்குவார்கள். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
