கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலும் , இரண்டாவது கட்டமாக மே 3ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி ஏப்ரல் மாதம் முழுவதுமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை கார் விற்பனையில் மந்த நிலையை சந்தித்திருந்தாலும், பூஜ்ஜிய நிலையை சந்திப்பது நிறுவனம் தொடங்கியதில் இருந்து இதுவே முதன் முறையாகும்.
குஜராத்தில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்திற்கு குறைந்த அளவு பணியாளர்களுடன் ஊரடங்கு காலத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் 634 கார்களை தயாரித்து முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.
அதுபோன்று, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை தொடர்ந்து ஹரியானா மனசேர் உற்பத்தி நிலையத்தில் மாருதி சுசுகி நிறுவனம் குறைந்த அளவு தொழிலாளர்களுடன் ஒரு ஷிப்ட் மட்டும் தொழிற்சாலையை இயக்கி கடந்த 20ஆம் தேதி முதல் பத்து நாட்களில் 50 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. எனினும் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என்று மாருதி சுசுகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,58,076 கார்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 83,792 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 47% வீழ்ச்சியை மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,