டாடா குழுமத்தின் தாய் அமைப்பான டாடா சன்ஸ்-ன் (Tata Sons) ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் முதல் முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதிக்கு பிறகு தாம் நீடிக்கப் போவது இல்லை என என்.சந்திரசேகரன் அறிவித்தார். இந்த அறிவிப்பு டாடா குழுமத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் பதம் பார்த்தது.
இந்நிலையில் டாடா சன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பம்பாய் ஹவுஸில் நேற்று ஆகஸ்ட் 18-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் 5 உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். இவர்களில் சர் ரத்தன் டாடா டிரஸ்ட், சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகியவை இணைந்து பொதுக்குழுவுக்கான கூட்டு பிரதிநிதி ஒருவரும் இருக்க வேண்டும்.
ஆனால் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுக் குழுவுக்கான கூட்டுப் பிரதிநிதியை இரு நிறுவனங்களும் நியமிக்க முடியாத சூழ்நிலை உருவானது.
இதனால் நேற்று நடைபெற இருந்த டாடா சன்ஸ் பொதுக் குழுவுக்கான ‘கோரம்’ கிடைக்கவில்லை. அதாவது டாடா சன்ஸ் பொதுக் குழுவுக்கான கூட்டு பிரதிநிதி இல்லாததால் நேற்றைய டாடா சன்ஸ் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெறவில்லை. டாடா சன்ஸ் குழுமத்தின் 108 ஆண்டுகால வரலாற்றிலேயே முதல் முறையாக ஆண்டு பொதுக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த பொதுக் குழு கூட்டம் நடைபெறும் வரை டாடா குழும தலைவராக என். சந்திரசேகரனே தொடருவார் எனவும் கூறப்படுகிறது.
