டாஸ்மாக் வழக்கு… தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

Published On:

| By Selvam

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Madras High Court adjourned

கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் ரூ.1,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்றும் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு, டாஸ்மாக் விவகாரத்தில் மார்ச் 25-ஆம் தேதி வரை எந்தவித மேல் நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தவித காரணமும் தெரிவிக்காமல் இந்த வழக்கில் இருந்து தாங்கள் இருவருமே விலகுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து டாஸ்மாக் வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு தங்கள் தரப்பில் இருந்து பதில்மனு தாக்க செய்ய தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “தமிழக அரசு இரவு நேரத்தில் இதுபோன்ற சோதனையே நடத்தியது இல்லையா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில், “இரவு நேரத்தில் நாங்கள் இதுபோன்று சோதனை நடத்தியது இல்லை” என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். Madras High Court adjourned

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share