இந்தியாவிற்கே முன்னோடி ஸ்டாலின்… நேரில் சந்தித்து பாராட்டிய எம்.ஏ.பேபி

Published On:

| By Selvam

இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திகழ்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார். Baby says aiadmk bjp

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபி இன்று சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை எம்.ஏ.பேபி சந்தித்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், பொலிட்பியூரோ உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஏ.பேபி, “தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். 25 நிமிடங்கள் அவருடன் உரையாடினேன். இன்னும் ஓராண்டுக்குள் தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தோம்.

மேலும், இந்த சந்திப்பின் போது வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்ததற்காகவும், ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

பாசிசவாத ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தலின்படி, பிரதமர் மோடி ஆட்சியில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நடத்தப்படுகிறது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு இதுதான் சமீபத்திய உதாரணமாகும்.

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அதிமுக மாநிலங்களவையில் வாக்களித்துள்ளது. ஆனால், அதேநேரத்தில் பாஜகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசினேன்” என்று தெரிவித்தார். Baby says aiadmk bjp

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share