முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் (Vijay Cabinet) இடம் பெறுவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஓசூரில் நேற்று ஜூலை 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், “முதல்வர் விஜய் அமைச்சரவையில் நாங்கள் இடம் பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும் போது இந்த மண்ணிலே இருந்து கூட (ஓசூர்) கம்யூனிச தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு வாழ்த்துகள்” என கூறினார்.
இது தொடர்பாக புதிய தலைமுறை டிவி சேனலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று ஜூலை 15-ந் தேதி அளித்த பேட்டியில், “இதுபற்றி சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியனிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். இடதுசாரி கட்சிகள் இரண்டுமே அமைச்சரவையில் பங்கேற்பது இல்லை என்று இரண்டு கட்சிகளின் மாநிலச் செயலாளர்களும் ஏற்கனவே அறிவித்துள்ளோம். இப்ப, அமைச்சரவையில் இடம் பெற சூழல் இருப்பதாக சிபிஐ வீரபாண்டியன் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் அவர்கிட்ட கேட்போம்.
ஆனால் சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரையில், அமைச்சரவையில் இடம் பெறுவது இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.
