தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட மறுத்து வரும் கர்நாடகா (Karnataka), மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது என்கிற பல்லவியை பாட தயாராகிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூரு சென்று காவிரி பிரச்சனைக்காக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார், மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது என காட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார்.
இது தொடர்பாக பெங்களூருவில் இன்று ஜூலை 26-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், “மாநிலத்தில் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 27-ந் தேதி நாளை திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு நிலவரம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் விவரங்கள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்படும்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, கர்நாடகாவின் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு (மேகதாது அணை உள்ளிட்ட) ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும்.
இந்த கூட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சோமண்ணாவிடம் பேசி இருக்கிறேன். மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, ஷோபா ஆகியோரிடம் பேச இயலவில்லை. அவர்களையும் இந்த கூட்டத்துக்கு வருமாறு அழைக்கிறேன்” என்றார்.
