சென்னையின் முக்கிய ஆன்மீக நிகழ்வான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தேறியது. இதனைக் காண சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
இவர்களது பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 39 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதுடன், பக்தர்களின் வசதிக்காக சுமார் 400 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடந்தது. காலை 7.45 மணிக்கு கலச புறப்பாடு தொடங்கியது. பின்னர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சுப்பிரமணியர் உட்பட அனைத்து சன்னிதிகளின் விமானங்கள் மற்றும் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு 8.45 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெற்றது. இதை அங்கு குவிந்திருந்த பக்தர்களும், நேரலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.