தவெக ஆட்சியில் சட்டமன்றமே ரீல்ஸ் போலத்தான் நடந்து வருகிறது என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று (ஆகஸ்ட் 23) திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்கப் டெத்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழ்நிலை நிலவுவதாக கனிமொழி எம்பி தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற பல குற்றச் சம்பவங்களில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், சில நேரங்களில் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.
இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணிக்கம் தாகூர் கூறிய “ரீல்ஸ் ஆட்சி” விமர்சனம் குறித்து கேட்டபோது, “அரசு குறித்து பேசுவதற்கு அவர் கூட்டணியில் இருக்கிறார். ஆனால், சட்டமன்றமே ரீல்ஸ் போலத்தான் நடந்து வருகிறது” என தெரிவித்தார்.
