பெண்களின் உடையும், தோற்றமும்தான் இங்கு பிரச்சினையா? – கனிமொழி,ஜோதிமணி கொந்தளிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

அரசியலில் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவறை விமர்சிப்பது மலிவான அரசியல் என கனிமொழி எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளரும், திமுக எம்பியுமான கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ADVERTISEMENT

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.

பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில், “ஒரு பெண் பொதுவெளியில் அணியும் உடையைத் தீர்மானிக்கும் உரிமையை மற்றவர்களுக்கு யார் கொடுத்தது?

ஒரு காலத்தில் ஆண்கள் வேட்டி அணிந்தார்கள். நீண்ட தலைமுடி வளர்த்தார்கள். கொண்டை போட்டிருந்தார்கள். காலில் மெட்டி அணிந்தார்கள். காலம் மாறியபோது ஆண்களின் உடையும் தோற்றமும் மாறியது. அதை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ADVERTISEMENT

அப்படியிருக்க, பெண்களின் நடை, உடை, பாவனைகள் மட்டும் ஏன் தொடர்ந்து சமூக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன?

குறிப்பாக, பொதுவாழ்வில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து அவர்களின் உடலை, உடையை, தோற்றத்தை கேலி செய்வது என்பது சாதாரண விமர்சனம் அல்ல. அது பெண்களை முழுமையான மனிதர்களாக பார்க்காமல், வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் மோசமான மனநிலையின் வெளிப்பாடு.

மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் திருமிகு.கீர்த்தனாவைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள சர்ச்சையும் இதன் தொடர்ச்சியே. முதலில், அந்தக் காணொளியில் இருப்பவர் கீர்த்தனா அல்ல. ஆனால் அது அவராகவே இருந்தாலும் கூட, ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், அதற்காக அவரை அவமானப்படுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை.

பொதுவாழ்வில் இருக்கும் பெண்களின் கருத்துகளையும், செயல்பாடுகளையும் விமர்சிக்கலாம். ஆனால் அவர்களின் உடலைத் தாக்குவதும், உருவக் கேலி செய்வதும் விமர்சனம் அல்ல; அது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடு. ஒரு சமூக வன்முறை.

இந்தப் போக்கு காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஒரே வித்தியாசம் , இன்றைய பெண்கள் இத்தகைய தாக்குதல்களைக் கண்டு கூனிக் குறுகுவதில்லை. தங்கள் மீது வீசப்படும் அவதூறுகளையும், இழிவான விமர்சனங்களையும் கண்டு அஞ்சாமல், பொட்டில் அடித்தது போல தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பெண்களின் உடை பிரச்சினை அல்ல. பெண்களைப் பார்க்கும் பார்வையே பிரச்சினை. மாற்றவேண்டியது அதைத்தான்.

கீர்த்தனா அவர்களின் தைரியமான எதிர்வினைக்கு எனது பாராட்டுகள்.

More power to Keerthana” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share