தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் சட்டப்பேரவையில் விதிகளுக்கு முரணான, அவதூறான அல்லது அலுவல் முறைக்குப் பொருந்தாத பேச்சுகளை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறார்.
எனினும் நேரலையில் இருந்து இவை எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பரப்பப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) சட்டப்பேரவையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ எம்.விஜய், ”உசிலம்பட்டி பகுதி மக்கள் தண்ணீரே இல்லாமல் வாடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த திமுக, அதிமுக ஆட்சிகள் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தரவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
உடனே திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
திமுக எம்.எல்.ஏ செந்தில் குமார் பேச எழுந்தார்.
இந்தசூழலில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உட்காருங்கள் என்று கூறிய நிலையில், உடனே பேச எழுந்த முன்னாள் அமைச்சரும் திமுக கொறடாவுமான எ.வ.வேலு, ”எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அந்தப் பகுதியைச் சார்ந்தவர். தண்ணீர் பிரச்சனையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தண்ணீர் பிரச்சனை என்பது எப்பொழுதும் இயற்கையாக வருவதுதான், அது ஆட்சியை வைத்தெல்லாம் கிடையாது. மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் பிரச்சினை வரத்தான் செய்யும். அதில் ஒன்றும் மாற்றுக்கருத்து கிடையாது.
அதேபோன்று, போர் போடும்போது 400 அடி, 800 அடி, 1200 அடி என பார்க்கிற பொழுது, ஒரே ஊரில் ஒரு இடத்தில் 400 அடி போர் போடணும், இன்னொரு இடத்தில் 800 அடி போடணும், இன்னொரு இடத்தில் 1000 அடி போடணும். இதை நேரடியாக ஒரு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டாக சொல்ல முடியாது, அது இயற்கைதான்.
ஆனால், திட்டமிட்டு… திட்டமிட்டு… என்று கூறி, ஏற்கனவே இருந்த ஆட்சியில் என்று எங்களுடைய ஆட்சியை குறிப்பாக குற்றம்சாட்டுகிறார். அதைப்பற்றி ஒரு விளக்கம் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் கேட்கிறபோது எங்களை அனுமதிக்க வேண்டும்.
நீங்கள், ”எக்ஸ்சேஞ்ச்” செய்கிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் பேசுவது லைவில் போய்விடுகிறது. நீங்கள், இதைச் சொல்லி பிரயோஜனம் இல்லை.
எல்லாம் ரீலாக எடுத்து போட்டுவிடுகிறார்கள்…. ரீல்… ரீல்… எனவே உடனே பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்
