நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் உலக நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு உயர வேண்டும். அதற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் திமுகவிற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “வணக்கம்,தமிழ்நாடு.. ஒரு நடிகனாகவோ, அரசியல் கட்சித் தலைவராகவோ இல்லாமல், தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழில் சிந்திக்கிற ஒரு சாதாரண தமிழனாக உங்களுடன் பேசுகிறேன்.என்னைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் தெற்குக்கும் வடக்குக்கும் இடையிலானது. தமிழ்நாடு முன்னோக்கிப் போக வேண்டுமா, பின்னோக்கிப் போக வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த முடிவுகள் சென்னையில் எடுக்கப்பட வேண்டுமா, அல்லது டெல்லியில் இருந்து சொல்லி நமக்கு செய்தி வர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதலிடம் வகிக்கிறது.
திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகள், மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் தகுதி படைத்தவர் என்பதை உறுதி செய்கின்றன. அன்று பெரியார் நமக்கு சுயமரியாதையைத் தந்தார். அண்ணா அதற்கு அரசியல் குரல் கொடுத்தார். கலைஞர் தன் அறிவாலும், உறுதியாலும் தமிழ் அடையாளத்தைக் காத்தார். இன்று ஸ்டாலின் கூட்டாட்சித் தத்துவத்தின் காவல் வீரராகத் திகழ்கிறார்.
வெவ்வேறு தலைவர்கள், வெவ்வேறு காலகட்டங்கள். ஆனால் முழக்கம் ஒன்றுதான் — “தமிழும் தமிழ்நாடும் ஒருபோதும் தலைவணங்காது”. அந்தக் கனல் இருக்கும் வரை தமிழ்நாட்டை எவராலும், எவனாலும் வீழ்த்த முடியாது. தற்போது இருக்கும் நலத்திட்டங்கள் தொடர வேண்டும்.
உலக நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு உயர வேண்டும். அதற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதை நீங்களும் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு யோசிக்காமல் வாக்களித்துவிட்டீர்கள் என்றால், இது ரெடிமேட் சட்டை அல்ல. பிடிக்கவில்லை என்றால் உடனே எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளவதற்கு.. யாரால் நம்மைப் பாதுகாக்க முடியும்? யாரால் நம் உரிமைகளுக்காகப் போராட முடியும்? யாருக்கு உண்மையிலேயே அந்த எண்ணம் உள்ளது என்பதை யோசித்து, உணர்ந்து வாக்களிப்பது அவசியம்.
திமுகவால் தான் அது சாத்தியமா என்று கேட்டால், வரலாறு “ஆம்” என்றே பதில் சொல்லும். நினைவிருக்கட்டும் — தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி. அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று, ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள். தமிழே எழுவாய்! தமிழே வெல்வாய்!” என தெரிவித்தார்.
