சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தசூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட வீடியோவில்,
“வாக்குரிமை என்பது நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே ஒரு குடும்பத்தின் அதிகாரப் பசிக்காக அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விட்டார்கள். சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
உயர்கல்வித்துறையை சீரழித்து, சந்து பொந்துகளில் எல்லாம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய இந்த அராஜக குடும்ப ஆட்சியை அகற்ற உங்கள் வாக்கு தேவை. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை மீட்டெடுத்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக் என்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியது நமது அண்ணா திமுக அரசாங்கம். இந்த மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத்தை தமிழகத்திற்கு வழங்க இருக்கின்றோம். அது மூலம் தமிழ்நாடு இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணிச் சின்னங்களான இரட்டை இலைச் சின்னம், தாமரைச் சின்னம், மாம்பழச் சின்னம், குக்கர் சின்னங்களில் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
