“அன்புடன் உங்கள் பாக்யராஜ்” 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார்

Published On:

| By Pandeeswari Gurusamy

திரைக்கதை மன்னனும், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது விருப்பப்படி, மறைவிற்குப் பின் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

மறைந்த பாக்யராஜ் அவர்களின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, தனுஷ், சிவகார்த்திகேயன், பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, ராதிகா உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரையுலகினரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

இறுதி ஊர்வலம்:

இதனைத் தொடர்ந்து இன்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வள்ளுவர் கோட்டம், கிரீன்வேஸ் சாலை, அடையாறு வழியாக இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை நோக்கிச் சென்றது. வழிநெடுகிலும் பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டு வந்து அவரது உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை:

இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும், தமிழக அரசின் சார்பில் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதை மற்றும் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share