நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளிக்கப்பட்டுள்ளது. judicial custody for amalraj and subakar
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்து, 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, சீமான் மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்றதால் நேற்று ஆஜராகவில்லை.
இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப்ரவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டது. உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு இதுதொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குள் சென்றனர்.
ஆனால் அங்கே சீமான் வீட்டு பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட அமல்ராஜை கைது செய்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமான் வீட்டு டிரைவர் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், ஆயுதச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், ஓட்டுநர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு அமல்ராஜ், சுபாகர் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்படுவார் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று தனது வீட்டில் நடந்த சம்பவத்தையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் ‘நாளைக்கு நான் ஆஜராக போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.