சமீப நாட்களாக அரசியல் தலைவர்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.
2021 டிசம்பரில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது. அதில், பிட்காயினை இந்தியா அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக ட்வீட் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பாஜக தேசிய தலைவரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.

அதில், உக்ரைனுக்கு நன்கொடை அளிக்க வேண்டும். உக்ரைன் மக்களுடன் நில்லுங்கள். கிரிப்டோகரன்சி நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறேன். பிட்காயின் மற்றும் எத்தேரியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பதிவு ரஷ்யாவுக்கு ஆதரவாக பதிவிடப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டு, கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ட்விட்களும் நீக்கப்பட்டன.
உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக உக்ரைன் கூறுகிறது. ஆனால் இந்தியா நடுநிலையாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளது. இந்த சூழலில் உக்ரைன் மக்களுடன் நில்லுங்கள் என்று ஹேக் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோன்று அனானிமஸ் (Anonymous) என்ற ஹேக்கர்கள் குழு, ரஷ்ய கூட்டணி நாடான செச்சினியாவின் அரசாங்க இணையதளத்தை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
**-பிரியா**
